சிலுவைமொழி வெண்பா - பொன் வ கலைதாசன்
ஆதி முதலிருந்த சோதி யவன்புவியின்
மீதில் பிறப்பெய்தி மானுடர்க்காய் - நாதியற்று
நீதி நிறைவேற்ற நீள்குருசில் தொங்குங்கால்
ஓதியநற் சொற்க ளிவை.
1.மன்னிப்பு
ஏது புரிகின்றோம் என்றே புரியாமல்
தீது புரிவோர்தம் தீச்செயலை - தாதஎம்
நீதி பரனேநீர் மன்னித் தருள்கென்றார்
ஆதி முதல்வ னவர்!
2. மீட்பு
இறைவா உனதரசை எட்டுகையில் என்னை
மறவாய் எனக்கள்வன் வேண்ட - பரத்தில்
இருப்பாய் எனதருகில் இன்றேயென் றண்ணல்
உரைத்தார் திருவாய் மலர்ந்து!
3.பரிவு
சாவு மரத்தினிலே செந்நீர் உகும்போதும்
மேவு மரியவளின் மெய்காக்க - யோவானைக்
கூவி யழைத்து மகனாக்கித் தாயாரின்
நோவு களைந்தார் அறி!
4.ஏக்கம்
ஈசன் மனுக்குலத்தை மீட்கக் கொலைமரத்தில்
நீச நிலையடைந்து தந்தையிடம் - பேசுகையில்
என்னை உதறியதேன் தேவா எனுங்கதறல்
கண்ணை நனைக்கும் குரல்!
5.தாகம்
மேகம் கருத்திருக்க மேனி துடிதுடிக்க
ஏகத் திருமைந்தன் மானுடர்க்காய்த் - தேகத்தில்
சாகும் பொழுதாங்கே வேத உரைக்கேற்ப
தாகம் எனக்கென் றனர்!
6.வெற்றி
ஒடித்தார் பகையை இடித்தார் சுவரை முடித்தார்நம் மீட்பின் கணக்கை - அடித்தோர்
குடிக்கக் கொடுத்தகடுங் காடி அருந்தி
முடிந்ததென்று ரைத்தார் கிறிஸ்து!
7. நிறைவு
இப்புவியில் எந்தாய் எனக்களித்த ஊழியத்தை
எப்பிழையு மின்றி நிறைத்திட்டேன் - அப்பாநான்
ஒப்புவித்தேன் என்னாவி உம்கரத்தி லென்றியேசு
செப்பினார் மேன்மை சிறந்து!
அழைப்பு
மாசு கறைபடிந்த மண்ணுலக வாழ்வினின்று
வீசு புகழ்மணக்கும் விண்வாழ்வை - நேசர்தம்
பாச மதனால் அருள்வாரே மீட்பிற்கி
யேசு கதிவே றிலை
முடிப்பு
சிலுவை மரத்தினின்று சிந்தியவிம் மொழிகள்
நிலுவை எதுவுமின்றி நீசர் - பளுவைத்
தொலைத்த வகையுரைக்கும், ஏற்போர் எவர்க்கும்
நிலைத்தபெரு வாழ்வும் தரும்! .
- பொன் வ க
வெளியீடு: சிறகடிப்பு இரு மாத இதழ் மார்ச்-ஏப்ரல்
கருத்துகள்
கருத்துரையிடுக