பட்சிக்கிற சீனாய் மலையும், கிருபையுள்ள கல்வாரி மலையும் || கிறிஸ்தவ சகோதர சபை மேஜை சிந்தனை

நமது கர்த்தரும் அருமை இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் அன்பின் வாழ்த்துக்கள்.

ஆராதனை சிந்தனைக்கு உதவியாக, யாத்திராகமம் 32 ஆம் அதிகாரத்தை வாசிப்போம் (நேரம் கருதி குறிப்பிட்ட சில வசனங்களை வாசித்துக்கொள்ளலாம்)

இங்கே தேவன் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து வனாந்திரமார்க்கமாய் பலத்த அடையாளங்களாலும் அற்புதங்களாலும் கூட்டிவந்த இஸ்ரயேல் மக்களின் மோசமான பாவத்தைக்குறித்துப்பார்க்கிறோம். தேவனுடைய பயங்கரமான சத்தத்தை சில நாட்களுக்கு முன் கேட்ட இந்த இஸ்ரயேல் மக்கள் தான் "கர்த்தர் சொன்னவைகளையெல்லாம் செய்வோம், யாத் 19:8" என்று கர்த்தருக்கு முன்பாக அறிக்கையிட்டார்கள்.  தேவன் அங்கே சீனாய் மலையில் கற்பித்த 10 கட்டளைகள் யாத் 20 ஆம் அதிகாரத்தில்  பட்டியலிடப்பட்டிருக்கிறது. 

இப்பொழுதும் மோசே தேவனோடு உறவாடவும் தேவன் தனக்குக் கற்பிக்கிற காரியங்களை மக்களுக்கு சொல்லவும், கர்த்தருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்து அங்கே மலைக்கு ஏறுகிறார் (யாத் 24). இதை இஸ்ரயேல் மக்கள் எல்லாரும் பார்த்தார்கள். இரவும் பகலும் நாற்பது நாட்கள் ஆகியும் மோசே இறங்கி வராதமையால், இஸ்ரயேல் மக்கள் மோசே இறந்துபோய் இருப்பார் என்ற நன்றியற்ற முடிவுக்கு வந்தார்கள். வனாந்திரத்தில் அற்புதவிதமாக தண்ணீரைக் கொடுத்தவரையும், தூதரின் உணவாம் மன்னாவால் தங்களை ஆச்சரியமாக போஷித்தவருமாகிய தேவனை மறந்தார்கள். எவ்வளவு சீக்கிரமாய் தேவனை மறந்தார்கள் என்பதைப் பார்க்கும்போது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது! ஆனால் இதுவே நம் நிலையுமாக இருப்பது கவலைக்கிடம். 

கர்த்தர் இஸ்ரயேல் மக்கள் தனக்கு விரோதமாக பாவம் செய்ததை மோசேக்கு தெரியப்படுத்தினார். இவர்கள் செய்த பாவம் எவ்வளவு பயங்கரமானது என்பதை அங்கே விளக்குகிறார். இஸ்ரயேல் மக்கள் செய்த பாவத்திற்கு சரியான தண்டனை தேவன் கொடுப்பதாக இருந்தால், இஸ்ரயேல் மக்களை ஒட்டுமொத்தமாக அழித்து, மோசேயின் மூலமாக மீண்டும் தேவன் தமக்காக ஒரு மக்களை ஏற்படுத்தி அவர்களைத் தாம் வாக்களித்த தேசத்திற்கு கூட்டி செல்வார். ஆனால் இங்கே மோசே ஒரு நல்ல மேய்ப்பனாக, தேவனுக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் இடையே மத்தியஸ்தனாக நின்று தேவனிடம் மன்னிப்பிற்காக கெஞ்சுகிறான். தன்னுடைய ஜீவனையும் துச்சமென மதித்து, ஜீவபுஸ்தகத்திலிருந்து தன் பெயர் கிறுக்கிப்போடப்பட்டாலும் பரவாயில்லை, எப்படியாவது இந்த மக்களை மன்னியும் என தேவனுடைய பாத்தில் கெஞ்சுகிறான். தேவன் தமது வாக்குத்தத்ததை நிலைநிருத்தும்படியாக மோசேயின் ஜெபத்தைக் கேட்டார். 

"மோசேயின் ஜெபத்தைவிட வல்லமையான ஜெபம் கொல்கொதாவில் சிலுவையில் இயேசு கிறிஸ்து நமக்காக ஜெபித்த ஜெபம்; "பிதாவே, இவர்களுக்கு மன்னியும்." ஏனென்றால், பிதாவாகிய தேவன் தம் குமாரனின் ஜெபத்தை எப்பொழுதும் கேட்கிறவராகவும் பதில் கொடுக்கிறவராகவும் இருக்கிறார்." (லூக்கா 23:34, யோவான் 11:42)

தேவன் நம்மை எகிப்த்தின் அடிமைத்தனத்தைவிட மோசமான அடிமைத்தனத்திலிருந்து காப்பாற்றியிருக்கிறார். சாத்தானின் அடிமைத்தனத்தில் சிக்கி, எதிர்காலத்தைக்குறித்து (நித்தியத்தைக்குறித்து) நம்பிக்கையற்றவர்களாக, தேவனற்றவர்களாக வாழ்ந்துகொண்டிருந்த உன்னையும் என்னையும் இரக்கமாக கண்ணோக்கிப்பார்த்தார். பாவத்திலிருந்தும், பாவத்தின் தண்டனையாகிய தேவனுடைய நித்திய கோபத்திலிருந்துமை நம்மைக் காப்பாற்றும்படியாக, விடுவிக்கும்படியாக தம் சொந்த குமாரனை இந்த பூமிக்கு அனுப்பினார். இஸ்ரயேல் மக்கள் தேவ மன்னிப்பை அடையும்படி மோசே தன் பெயரை ஜீவ புஸ்தகத்திலிருந்து நீக்கிப்போடும்படி கேட்டும், அவன் பாவம் உள்ள மனுஷன் ஆகையால் அவனால் தன் ஜீவனை ஈடாகக்கொடுக்கமுடியவில்லை (யாத் 32:32-33). ஆனால், தேவ குமாரனாகிய நமது நாதர் இயேசு கிறிஸ்து நம்முடைய மீறுதல்களை தம்மீது ஏற்று சிலுவையில் பழுதற்ற பலியாக தம்மையே ஒப்புக்கொடுத்தார். மரணத்தை ஜெயித்தவராய், உயிர்த்தெழுந்தவராய், இன்றும் பிதாவுக்குமுன்பாக நின்று தமது இரத்தத்தைக்கொண்டு நமக்காக பரிந்து பேசுகிறவராக இருக்கிறார்.  நம்மை நித்தியத்தில் கூட்டிச்சேற்க அதிவிரைவில் வருகிறவராக இருக்கிறார்.

"மாம்சத்தினால் பெலவீனமாய் இருந்த மோசேயால் செய்யமுடியாததை கிறிஸ்து செய்தார். ஆம், உனக்காக அவர் மரித்தார்." யோவான் 10:11, 1 கொரி 5:7

"தேவனுடைய தாமதம் தாமதம் அல்ல. உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து தாம் சொன்னபடியே மீண்டும் வருவார்." (2 பேதுரு 3:4, ஆபகூக் 2:3, அப்போஸ்தலர் 1:11)

பாவம் மிகக்கொடியது. தேவனுடைய கட்டளையை (பரிசுத்த வேதத்தை) ஒருவன் மறக்கும்பொழுது அவன் கடவுளை மறக்கிறான். தேவனுடைய கட்டளையை இஸ்ரயேல் மக்கள் மறந்தபொழுது, அங்கே மூவாயிரம்பேர் கொல்லப்பட்டார்கள். தேவன் பரிசுத்தர். பாவத்தோடு தேவனை தரிசிக்கமுடியாது. இன்றும், மேஜையை சுற்றி கூடியிருக்கிற நாம் நமது வாழ்க்கையை சீர்தூக்கிப்பார்ப்போம். நமது வாழ்க்கையில் ஏதாவது குற்றமோ, குறையோ இருந்தால், அவற்றை சீர்தூக்கிப்பார்த்து இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவரிடத்தில் மெய்யான மனந்திரும்புதலோடு வாருங்கள். உங்களுக்காக (நமக்காக) அடிக்கப்பட்டு சிலுவையில் தொங்குகிற கிறிஸ்துவை நோக்கிப்பாருங்கள். தேவ மன்னிப்பின் நிச்சயத்தோடு இந்த பந்தியில் பங்குபெருவோம். கர்த்தருடைய பரிசுத்த நாமம் ஒன்றே மகிமைப் படுவதாக!

(ஆண்ட்ரூ கிங்ஸ்லி ராஜ், 7/6/2025)




கருத்துரையிடுக

புதியது பழையவை

தொடர்பு படிவம்